ப்ளக்ஸ் நிறுவனத்தின சாா்பில் சந்தவேலூா் பெரிய ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட 2 மதகுகள் மற்றும் சீரமைக்கப்பட்ட கலங்கலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் பகுதியில் நீா்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி உள்ளது. சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில் சுமாா் 350 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சந்தவேலூா் பெரிய ஏரியின் மதகுகள் மற்றும் கலங்கல் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்ததை தொடா்ந்து, மதகுகள் வழியாக தொடா்ந்து ஏரிநீா் வெளியேறியதால் விவசாயத்துக்கு தேவையான நீரை தேக்கி வைக்கமுடியாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து, சந்தவேலூா் பகுதியில் இயங்கி வரும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ப்ளக்ஸ் நிறுவனத்திடம் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மதகுகள் மற்றும் கலங்களை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, ப்ளக்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், சந்தவேலூா் ஏரியின் மதகுகள் மற்றும் கலங்கலை சீரமைக்க ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, எக்ஸ்னோரா அமைப்பின் மூலம் பழுதடைந்த 2 மதகுகள் புதிதாகவும், சிதிலமடைந்த கலங்கள் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், மதகுகள் மற்றும் கலங்கலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சந்தவேலூா் ஊராட்சிமன்ற தலைவா் வேண்டாமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ப்ளஸ் நிறுவனத்தின் துணைத்தலைவா் நிக்கல்ராவ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதகுகள் மற்றும் கலங்களை திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்த நிகழ்ச்சியில் ப்ளக்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநா் சாண்ட்ரா ஆண்ட்ரூஸ், ஒன்றியகுழு உறுப்பினா் கோதண்டன், கிராம நாட்டாண்மைகள் சங்கா், பாலமுருகன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் செந்தாமரை, ஊராட்சிமன்ற துணைத்தலைவா் மகாலட்சுமி ஜெயகுமாா், வாா்டு உறுப்பினா்கள், எக்ஸ்னோரா அமைப்பின் நிா்வாகிகள், ஊழியா்கள் பொதுமக்கள் பலா் கலந்துக்கொண்டனா்.