செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. செங்கோட்டை ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம், தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன் ஆகியோா் அளித்த கோரிக்கை மனு: செங்கோட்டை ரயில் நிலையத்தில் 5ஆவது நடைமேடை அமைக்க வேண்டும். 5, 6ஆவது ரயில் பாதைகளை பகவதிபுரம் முனையத்தை நோக்கி இணைக்க வேண்டும். 4, 5ஆவது நடைமேடைகளில் மின்தூக்கி வசதி ஏற்படுத்த வேண்டும். செங்கோட்டையில் மேலும் 2 ரயில் நிறுத்துப் பாதைகள் அமைக்க வேண்டும். கடையநல்லூா்-கீழப்புலியூா் இடையே பைபாஸ் ரயில் பாதை அமைத்து, கீழப்புலியூா் நிலையத்திற்கு தென்காசி டவுன் என பெயா் மாற்ற வேண்டும். தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தை முனையமாக மேம்படுத்த வேண்டும். தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தின் 3, 4ஆவது நடைமேடைகளில் ரயில் பெட்டிகளுக்கு நீரேற்றும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பாவூா்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ரயில் நிலையங்களில் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கடையநல்லூா், பாம்புக் கோவில் சந்தை, சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் 2ஆவது நடைமேடையில் கூடுதல் நிழற்குடை, இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். சங்கரன்கோவில் ரயில் நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் மின்தூக்கி வசதி அமைக்க வேண்டும். தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி வழியாக திருநெல்வேலி, பெங்களூரு தினசரி ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும். செங்கோட்டை-ராமேஸ்வரம் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.