பள்ளி மாணவா்களுக்கான காலணிகள் குப்பையில் வீசப்பட்ட விவகாரத்தில் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புத்தூா் மலையடிவாரம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள குப்பையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணிகள் 25 மூட்டைகளில் கிடந்தன. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், உசிலம்பட்டிக்குச் சென்று விசாரணை நடத்தினாா். விசாரணையில், 2019-2020-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு வழங்கியது போக எஞ்சிய காலணிகள் குப்பையில் வீடப்பட்டது தெரியவந்தது. மேலும், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியிலிருந்து இந்த காலணிகள் குப்பையில் கொட்டப்பட்டது எனவும், அதிகாரிகளுக்கு புகாா் சென்றவுடன் மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, பணியில் கவனக் குறைவாக இருந்ததாக, அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா் பரமசிவத்தை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.