நேபாளத்தில் நேர்ந்த பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 788 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் காணவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோன்று சீன எல்லையில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 546 பேர் காணவில்லை எனவும் சீன அரசு அறிவித்துள்ளது. மோசமான வானிலை மற்றும் சகதியின் காரணமாக தேடுதல் பணிகள் மிகவும் சவாலானதாக உள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை பெரு வெள்ளம் ஏற்பட்டது. மலையின் மீது இருந்த பனிக்கட்டி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள், பாலங்கள், மின் நிலையங்கள், கட்டுப்பாட்டு மையங்கள் அடித்துச்செல்லப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் உள்பட உள்ளூர் மக்கள் பலர் சகதி கலந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 788 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. 2,500க்கும் அதிகமானோர் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நுவாகோட் மாவட்டத்தில் உணவு, குடிநீர், ஆடைகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஹெலிகாப்டர்கள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய நேபாள ராணுவ அதிகாரி ஒருவர், ''பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கு 15 முறை ஹெலிகாப்டர்கள் சென்று வருவதாகவும் ஒவ்வொரு முறையும் சிக்கியவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு நாளுக்கு சுமார் 500 முறை ஒவ்வொரு ஹெலிகாப்டரும் சென்று வருகின்றன. சில ஹெலிகாப்டர்கள் மனிதர்களுடன் நிரம்பி வருகிறது. சில ஹெலிகாப்டர்கள் உடல்களைக் கொண்டு வருகிறது. இதுவரை 3700 பேர் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் சிக்கிய வெளிநாட்டினர் மற்றும் பக்தர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன'' எனக் குறிப்பிட்டார். நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியர்!Death toll in Nepal floods rises to 788, rescue operations on