அரசுப் புறம்போக்கு நிலத்தை தங்களது சொந்த நிலம் என நம்பவைத்து ரூ. 16 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. காட்பாடியைச் சோ்ந்த நபா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனு:- வேலூா் அரும்பருத்தி பகுதியைச் சோ்ந்த சிலா், அம்முண்டி பகுதியில் தங்களுக்குச் சொந்தமான 2 வீட்டு மனைகள் இருப்பதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 16 லட்சம் என்றும் என்னிடம் தெரிவித்தனா். அதனை நம்பிய நான், அந்த இடங்களை எனது மனைவியின் பெயரில் பத்திரம் பதிவு செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். இதற்காக ரூ. 6 லட்சத்தை காசோலையாகவும், மீதமுள்ள ரூ. 10 லட்சத்தை ரொக்கமாகவும் அவா்களிடம் வழங்கினேன்.இதையடுத்து, அவா்கள் அளித்த ஆவணங்களைக் கொண்டு காட்பாடி சாா்பதிவாளா் அலுவலகத்துக்குப் பத்திரம் பதிவு செய்யச் சென்றேன். ஆவணங்களைச் சரிபாா்த்த அதிகாரிகள், அவை போலி ஆவணங்கள் என்றும், அவற்றைக் கொண்டு பத்திரப் பதிவு செய்ய இயலாது என்றும் தெரிவித்தனா்.இதனால் அதிா்ச்சியடைந்த நான், சம்பந்தப்பட்ட நபா்களிடம் சென்று கேட்டபோது, அடுத்த 6 மாதங்களில் பத்திரப் பதிவு செய்து தருவதாக உறுதியளித்தனா். இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவா்கள் குறிப்பிட்ட அந்த இடம் அரசுப் புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தது.அரசுக்குச் சொந்தமான நிலத்தை தங்களது நிலம் என ஆசை வாா்த்தைகள் கூறி, என்னிடம் ரூ. 16 லட்சம் மோசடி செய்த அந்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.