ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டம்: 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் நிர்மலா சீதாராமன்!

Wait 5 sec.

வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறு நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது, ​​அவர் ஜி20 நிதியமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதுடன், முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள்(சிஇஓ-க்கள்) மற்றும் வணிகத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.முதலாவதாக கனடாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டு, அங்கு நடைபெற்ற முதலாவது 'இந்தியா-கனடா பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடல்' நிகழ்வில் பங்கேற்ற பிறகு, நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த நிர்மலா சீதாராமனை இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதரகத் தலைவர் நம்க்யா சி. கம்பா மற்றும் சிகாகோவிற்கான இந்தியத் தூதரகத்தின் தூதரக அதிகாரி சோமநாத் கோஷ் ஆகியோர் வரவேற்றனர்.சிகாகோவில் இருக்கும் நிர்மலா சீதாராமன், முக்கிய முதலீட்டாளர்களுடனான மாநாட்டில் பங்கேற்பதுடன், தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுகிறார். இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான துறைரீதியான வழிமுறைகள் ஆகியவை குறித்த விவாதங்கள் இதில் இடம்பெறும்.மேலும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள 'போல்ஸ்கி தொழில்முனைவு மற்றும் புத்தாக்க மையத்தை' பார்வையிடும் சீதாராமன், அங்கு தொழில்முனைவு, புத்தாக்கம், தொழில்நுட்ப வணிகமயமாக்கல் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்கச் சூழலுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து அவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர், சிகாகோவில் உள்ள இந்தியச் சமூகத்தினர் பங்கேற்கும் நிகழ்வில் நிர்மலாசீதாராமன் கலந்துரையாடுகிறார். அமெரிக்காவின் தலைமையின் கீழ் வட கரோலினாவின் ஆஷ்வில் நகரில் நடைபெறவுள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இந்தியக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கிறார். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் மூத்த பொருளாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து, முக்கிய உலகளாவிய பொருளாதார மற்றும் நிதிசார் விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் துணை அதிகாரிகள் நிலையிலான கூட்டத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை, சர்வதேச நிதி ஒத்துழைப்பு மற்றும் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த பொருளாதாரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிற விவகாரங்கள் குறித்த விவாதங்களில் பங்களிக்க, ஜி20-இன் நிதிசார் பிரிவில் இந்தியாவின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன உலகளாவிய பொருளாதார சவால்கள் குறித்த இந்தியாவின் கண்ணோட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், ஜி20 கூட்டாளி நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த நிகழ்வு வாய்ப்பளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் நியூயார்க் நகருக்குச் சென்று, அங்குள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் உயர் பிரதிநிதிகளுடன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று ஆலோசனை நடத்துகிறார். நிதித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் அவர் தனித்தனியாகச் சந்திப்புகளை நடத்தவுள்ளார். இதில் முதலீட்டு வாய்ப்புகள், இந்தியாவின் பொருளாதார மற்றும் நிதிச் சூழல், மற்றும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நிதி மற்றும் நிறுவன ரீதியான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் பயணத்தின்போது, ​​நாஸ்டாக் நிறுவனத்தின் வர்த்தகத்தைத் தொடங்கி வைக்கும் 'மணி அடிக்கும்' நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.தொழில்நுட்பம் சார்ந்த நிதிச் சந்தைகளின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் - மூலதனச் சந்தைகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் தொடர்பு ஆகியவை குறித்த புரிதலைப் பெற இந்தப் பயணம் வாய்ப்பளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவுக்கான இந்தப் பயணம், ஆகஸ்ட் 25 அன்று தொடங்கிய அவரது கனடாவுக்கான மூன்று நாள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.கனடாவில், டொராண்டோவில் நடைபெற்ற இந்தியா-கனடா இடையிலான முதலாவது பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்; மேலும் எரிசக்தி, செய்யறிவு மற்றும் முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அடிப்படையான கட்டமைப்பு மாற்றாக உள்ளது. அதிகரித்து வரும் நகரமாயக்கல், வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கம் மற்றும் உலகத்தம் வாய்ந்த எண்ம உள்கட்டமைப்பு ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இந்தியா-கனடா பொருளாதார உறவு வளர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே இந்திய வம்சாவழியினர் முக்கியமான பலமாகச் செயல்படுகின்றனர். தற்போது முதலீடு மற்றும் மூலதனப் பரிமாற்றங்களைத் தாண்டி, ஆழமான ஒத்துழைப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே மேலும் விரிவான பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்றார்.பொருளாதார மற்றும் நிதிசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு மற்றும் வணிகத்திற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்த விவாதங்கள் இதில் இடம்பெற்றன.கனடா மற்றும் அமெரிக்கா என நிர்மலா சீதாராமனின் ஒன்பது நாள் கூட்டுப் பயணம் செப்டம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.Finance Minister Nirmala Sitharaman landed in the US for a six-day visit, during which she will participate in the G20 Finance Ministers' meetingபீரங்கி எதிா்ப்பு ஏவுகணை: அமெரிக்காவிடம் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம்