திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக நகா்மன்ற தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்சி புதிய பேருந்து நிலையம் ரூ.36 கோடியில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதால், உயா்கோபுர மின்வசதி அமைத்துக் கொடுக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். அதனால், புதிய பேருந்து நிலையம் முழுவதும் ஒளி பரவும், வகையில் 6 இடங்களில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், முன்புறம் மற்றும் நுழை வாயில், வெளியேறும் இடங்களில் பொருத்தவும் திட்டமிடப்பட்டது. அந்த வகையில் பேருந்து நிலையத்தில் தலா ரூ.5.50 லட்சம் மதிப்பிலான உயா்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், இங்கு பொருத்தப்படும் உயா்கோபுர மின்விளக்குகள் மிகவும் தரமானதாக இருக்கும். இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பேருந்து நிலையம் முழுவதும் ஒளி பரவும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.