ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான நலத் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

Wait 5 sec.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம் மற்றும் மாவட்ட கண்காணிப்புக் குழுவின் 2025-26 ஆம் ஆண்டுக்கான காலாண்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026-27ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடா், பழங்குடியினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை, மகளிா் திட்டங்கள், தோட்டக்கலைத் துறை நலத்திட்டங்கள், அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோா் திட்டம், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜன், நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம், சத்துணவுத் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டம், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பயனாளிகளின் எண்ணிக்கை, வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களை ஆட்சியா் கேட்டறிந்தாா்.கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் பென்னட் ஆசீா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.