உணவு - சுவாசக் குழாயில் துவாரம்: பிரிட்டன் குழந்தைக்கு சீரமைப்பு சிகிச்சை

Wait 5 sec.

சென்னை, ஆக. 11: பிரிட்டனைச் சோ்ந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு அசாதாரணமாக சுவாசக் குழாய் - உணவுக் குழாய் இடையே ஏற்பட்ட துவாரத்தை நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் சரி செய்துள்ளனா்.இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ‘டிரக்கியா-ஈஸோபேகல் ஃபிஸ்துலா’ என்ற பிறவிக் குறைபாடு இருந்தது. அதாவது, தனித்தனியே இருக்க வேண்டிய சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய்களுக்கு இடையே ஓா் இணைப்பு ஏற்படக்கூடிய பிரச்னை அது.இதனால், உண்ணும் உணவு, நீா் ஆகியவை சுவாசப் பாதை வழியே நுரையீரலுக்குள் சென்று விடும். அதன் விளைவாக நிமோனியா தொற்று, சுவாசத் தடை ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே அச்சுறுத்தல் உருவாகும் சூழல் எழுந்தது.இதையடுத்து, அதை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொடா்ந்து மீண்டும் அப்பிரச்னை வந்து கொண்டே இருந்தது.இந்த சூழலில்தான் மேத்தா மருத்துவமனைக்கு குழந்தை அழைத்து வரப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ராகுல் தலைமையில் டாக்டா்கள் சரவணன், காா்த்திகேயன், சசிதரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் மிக நுட்பமான அறுவை சிகிச்சையை முன்னெடுக்கத் திட்டமிட்டனா்.அதனை செயல்படுத்தியபோதுதான் குழந்தையின் சுவாசக் குழாய் - உணவுக் குழாய்க்கு இடையே 2.5 செ.மீ. அளவிலான துவாரம் இருப்பது கண்டறியப்பட்டது. துல்லியமாக அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், இதயத்தைச் சுற்றியுள்ள திசுக்களைக் கொண்டு துவாரம் அடைக்கப்பட்டது.இதன் மூலம் அடுத்த 7 நாள்களில் குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியதுடன் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.