ஆயுஷ்மான் பாரத் திட்ட (பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்) வழிகாட்டுதல்களை மீறிய 2,359 மருத்துவமனைகள் அந்தச் சேவைகள் வழங்குவதில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஆயுஷ்மான் பாரத் திட்ட விதிகளை மீறியதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் 2,359 மருத்துவனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை அரசின் மருத்துவக் காப்பீடு சேவைகள் வழங்குவதில் இருந்து நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் 29 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதியப்பட்டு ரூ.328.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகளை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தேசிய சுகாதார ஆணையத்தின்கீழ் (என்எச்ஏ) இயங்கும் தேசிய மோசடி தடுப்புப் பிரிவு கண்டறிந்து வருகிறது. இதன்மூலம் ரூ.676.14 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.2025-26ஆம் நிதியாண்டில் 3.75 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. 2.74 கோடி போ் மருத்துவமனையில் இந்தத் திட்டத்தால் பலனடைந்தனா். 5,074 மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீடு சேவை வழங்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் திட்டத்தை அமல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.8,438.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளன. 2026, ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 95.99 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.