சிவப்பு வண்ணத்தைக் கண்டால் காளைகள் முட்ட வருகின்றனவே? இதற்கு என்ன காரணம்?வெளிநாடுகளில் நடக்கும் காளைச் சண்டையை திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். அதில் அலங்காரமாக உடையணிந்த ஒரு வீரர், பயங்கரமாகக் கொழுத்து இருக்கும் காளை மாடு ஒன்றை அடக்குவதற்கு முயற்சி செய்வார். அவர் கையில் ஒரு சிவப்பு வண்ணத் துணி இருக்கும். அந்தத் துணியை அவர் அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்து காளையைக் கேலி செய்வது போல போக்கு காட்டுவார். அதைக் கண்டவுடன் அந்தக் காளை மிரண்டு போய் அவரை நோக்கி எகிறி வரும். கடைசி நேரத்தில் அவர் விலகிக் கொள்ள காளை சற்று தூரம் போய், சடன் பிரேக் போட்டு நிற்கும். பார்ப்பவர்கள் எல்லோரும் கைகொட்டி ரசிப்பார்கள். இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்தவுடன் நமக்கு, காளை மாட்டுக்கும் சிவப்பு வண்ணத்துக்கும் ஆகாது போல. அதனால்தான் காளை மிரள்கிறது, முட்ட வருகிறது என்ற எண்ணம்தான் தோன்றும். உண்மையில் அப்படியல்ல!விலங்குகளுக்கு நிறங்களைப் பிரித்து திறன் கிடையாது. விலங்குகளுக்கு பார்வைத் திறன் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், பெரும்பாலான விலங்குகளுக்கு நிறத்தை வகைப்படுத்தும் அறிவு கிடையாது. சிவப்புத் துணி அசைவதுதான் காளைக்குத் தெரியும். அது சிவப்பா, பச்சையா, நீலமா, ஊதா கலரு ரிப்பனா என்றெல்லாம் தெரியாது. எந்த நிறத் துணியை அசைத்தாலும் அது மிரளத்தான் செய்யும். துணியின் அசைவுதான் அதை மிரள வைக்கிறது, நிறம் அல்ல. துணி அசைவதால், தனக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று நினைத்துக்கொண்டுதான் காளை முட்ட வருகிறது.இதுதான் உண்மை! சோதித்துப் பார்த்துவிடலாம் என்று பச்சை வண்ணத் துணியை எடுத்துக் கொண்டு காளையைத் தேடிப் போய்விடாதீர்கள்!Regarding rare information that children should know...இது தெரியுமா? கடல் நீர் உப்புக் கரிப்பதற்கான காரணம் என்ன?