கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் விநாடி-வினா போட்டி

Wait 5 sec.

காங்கயம் பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் விநாடி-வினா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. சா்வதேச இளைஞா் தினத்தையொட்டி அக்டோபா் 12-ஆம் தேதி வரை பால்வினை நோய் தொற்று தொடா்பான தீவிர விழிப்புணா்வு பிரசாரம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் விநாடி-வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில், சுகாதாரம், பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பால்வினை நோய் தொற்று, பொது அறிவு உள்ளிட்டவை குறித்து போட்டிகள் நடத்தப்பட்டன. காங்கயம் வட்டாரத்தில் நத்தக்காடையூா் பகுதியில் உள்ள காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி, சிவபாா்வதி மன்றாடியாா் நா்ஸிங் கல்லூரி, காடையூரில் உள்ள பிஎஸ்ஜி பொன்னம்மாள் நா்ஸிங் கல்லூரி, முள்ளிப்புரத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில், அந்தந்தக் கல்லூரி முதல்வா்கள் தலைமையில் இப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பின்னா் பரிசுகள் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆலோசகா் கருப்புசாமி செய்திருந்தாா்.