அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணைச் செயலர் அப்சரா ரெட்டி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் செய்தித் தொடர்பாராக சென்னையைச் சேர்ந்த திருநங்கையான அப்சரா ரெட்டி இருந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலர் பொறுப்பை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கியிருந்தார். இந்த நிலையில், மனதில் கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அப்சரா ரெட்டி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அப்சரா ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனதில் கனத்த உணர்வுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது விலகலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவுடனான எனது பயணம் எனக்கு வெறும் அரசியல் பயணம் அல்ல. புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா) அவர்கள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த மரியாதையும், அன்பும், அவருடைய அரசியல் சிந்தனைகள் மீதான நம்பிக்கையும் என்னை இந்த இயக்கத்துடன் இணைத்தவை. அம்மா (ஜெயலலிதா) அவர்கள் மக்களை முன்னிறுத்திய அரசியலையும், மரியாதை, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவருடைய அணுகுமுறையையும் நான் எப்போதும் மதித்து வந்துள்ளேன். அரசியல் என்பது மக்களைப் பிரிப்பதற்காக அல்ல; அவர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும் என்பதே நம்பிக்கை. எனது அரசியல் பயணத்தில் நீங்கள் எனக்கு வழங்கிய நம்பிக்கை, அன்பு, மரியாதை மற்றும் வாய்ப்புகளுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மீதான எனது தனிப்பட்ட மரியாதையும் அன்பும் என்றும் மாறாது.இந்த முடிவு எந்தவித கசப்பினாலும் அல்லது தனிப்பட்ட வருத்தத்தினாலும் எடுக்கப்பட்டதல்ல. எனது மனசாட்சிக்கும், நான் நம்பும் கொள்கைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். அதிமுகவில் இருந்த காலம் எனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயமாக இருக்கும். இந்த இயக்கத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களையும், பொறுப்புகளையும், நட்புகளையும், மக்களுடன் இணைந்து பணியாற்றிய வாய்ப்புகளையும் நான் என்றும் மதிப்புடன் நினைவுகூர்வேன்.எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம். ஆனால் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எனது நோக்கம் மாறாது. அம்மாவின் (ஜெயலலிதா) பாதையில், மக்களுக்காக குரல் கொடுப்பதும், தேவையான இடங்களில் பாலமாக இருப்பதும், தைரியத்துடனும் அன்புடனும் மரியாதையுடனும் தொடர்ந்து பணியாற்றுவதும் எனது உறுதியாக இருக்கும். இந்த அரசியல் முடிவைத் தாண்டியும், நம்மிடையேயான தனிப்பட்ட அன்பும் மரியாதையும் என்றும் தொடர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். மரியாதையுடனும் நன்றியுடனும்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான அப்சரா ரெட்டி, 2016 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால், அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், 2016 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைந்த அப்சராவுக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் அனைத்திந்திய மகளிர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலராகவும் அவர் நியமிக்கப்பட்டார். காங்கிரஸில் தேசிய அளவில் பதவியேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் அப்சரா பெற்றிருந்தார். 2020 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் மீண்டும் இணைந்த அப்சரா, மீண்டும் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.Apsara Reddy has announced her resignation as the Deputy Secretary of Policy Publicity for the AIADMK.