செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் 5 நாள்கள் நடைபெற்ற முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்காவைச் சேர்ந்த 5 வீரர்களும் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.இதில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்குப் போட்டியாக உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் ஜவோகிர் சிந்தரோவ்வும் கடுமையான சவால் அளித்தார். பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் இறுதிச்சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர். இருவரும் சமபலத்துடன் மோதியதால் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதன்மூலம், ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளைப் பெற்றார் பிரக்ஞானந்தா. சிந்தரோவ்வைவிட 1.5 புள்ளிகள் முன்னிலை பெற்று முதல் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா தனதாக்கினார்.இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றி வாகை சூடி சாதனை படைத்துள்ளார்.சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.Chief Minister Vijay has congratulated Praggnanandhaa on winning the championship title at the St. Louis Rapid and Blitz chess tournament.