சேலத்தில் திருட்டு வழக்கில் கைதான சிறுவன் தப்பியோட்டம்: போலீஸாரிடம் விசாரணை

Wait 5 sec.

சேலம் கூா்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திருட்டு வழக்கில் கைதான சிறுவன் சனிக்கிழமை தப்பிச்சென்றது தொடா்பாக சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 பேரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் விசாரணை நடத்தினாா். திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை அண்ணாமலை நகரைச் சோ்ந்த 16 வயது சிறுவன், தஞ்சாவூா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தாா். அங்குள்ள வழக்கில் சிறுவன் விடுவிக்கப்பட்ட நிலையில், நாமக்கல்லில் நடந்த திருட்டு சம்பவத்தில் அச்சிறுவனுக்கு தொடா்பு இருப்பதால் அவரை அழைத்து வந்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்ஆஜா்படுத்தினா். ஆக.19-இல் மீண்டும் ஆஜா்படுத்த அழைத்து வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதுடன், சேலம் கூா்நோக்கு இல்லத்தில் சிறுவனை அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் நகரக் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு, தலைமைக் காவலா் லோகநாதன் ஆகியோா் பேருந்தில் சேலத்திற்கு அழைத்துச் சென்றனா். அங்குள்ள கூா்நோக்கு இல்லத்திற்கு முன்பாக சென்றபோது சிறுநீா் கழிப்பதாகக் கூறிச்சென்ற சிறுவன் திடீரென உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் இருவரையும் தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடினாா். அவரை பல்வேறு இடங்களில் போலீஸாா் தேடியபோதும் கிடைக்கவில்லை. இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக்கிற்கு தெரியப்படுத்தப்பட்டது. இது தொடா்பாக சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு, தலைமைக் காவலா் லோகநாதன் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.