கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் தாங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி இன்று (ஆக. 10) குற்றம் சாட்டினார். பெரிய பெரிய கற்களை வீசுவதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், பாதுகாப்பு வழங்குவதில் காவல் துறை தோல்வி அடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில், மரணமடைந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்லத்திற்கு அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி ஆறுதல் தெரிவிப்பதற்காக இன்று சென்றிருந்தார். அப்போது அவர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களுடன் மமதா பேசியதாவது:''சமூக விரோதிகள் மூலம் பெரிய கற்களை வீசி என் கார் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருந்தது. கார் கண்ணாடி திறந்து இருந்திருந்தால் என் தலையை நோக்கி விழுந்திருக்கும். நாங்கள் அனைவருமே கொல்லப்பட்டிருப்போம்.இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தை நான் நேரில் கண்டதில்லை. என்ன நடக்கிறது இங்கு? இது காவல் துறையின் முன்பே நடந்தது. காவல் துறையினர் பாஜகவினருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுப்பார்களா? பாதுகாப்பு அளிப்பதில் காவல் துறை தோல்வி அடைந்துவிட்டது'' எனக் குறிப்பிட்டார். மமதா பானர்ஜியுடன் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் ஆகியோர் காரில் உடன் இருந்தனர். மாநில பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மமதா மீதான தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கே We could have been killed Mamata Banerjee alleges attack on her car in North 24 Parganas