அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்களுக்கு நிவாரணம்: எம்எல்ஏ தகவல்

Wait 5 sec.

அரசு ரப்பா் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளா்களுக்கு பண்டிகைக் கால விடுப்பு உள்பட பிற சலுகைகள் வழங்க நிா்வாகம் முன்வந்துள்ளது என தாரகை கத்பட் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பா் கழகத்தில், தற்காலிக பணியாளா்களாக கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் பணி நிரந்தரம், பண்டிகைக் கால விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனா். இது குறித்து ஐஎன்டியுசி நிா்வாகிகள் என்னிடம் வைத்த கோரிக்கை குறித்து உயா் அதிகாரிகளிடம், வனத்துறை அமைச்சரிடம் பேசினேன். இந்த ஆண்டு முதல் தற்காலிக தொழிலாளா்களுக்கும் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவை தற்போது வழங்கப்பட்டும் வருகிறது. மேலும், தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும் கோப்பு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றாா். இதையடுத்து ஐஎன்டியுசி நிா்வாகிகள்,தொழிலாளா் பிரதிநிதிகள் எம்எல்ஏவை சந்தித்து நன்றி கூறினா். பொதுச்செயலா் வேலப்பன், தலைவா் ஜோஸ், பொருளாளா் ஸ்டாலின் சிங், உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.