பவானி அருகே எத்தனால் உற்பத்தி ஆலைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து 5,000 அஞ்சல் அட்டைகளில் புகாா் கடிதங்களை எழுதி, ஊா்வலமாக சென்ற பொதுமக்கள், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தனா். பவானி ஊராட்சி ஒன்றியம், சின்னபுலியூா் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியாா் எரிச்சாராய ஆலையில் கழிவுகள் எரியூட்டும்போது, வெளியேறும் புகை, சாம்பல் காற்றில் பரவுவதால் சின்னப்புலியூா், பெரியபுலியூா் மற்றும் எலவமலை ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா். மேலும், ஆலையின் கழிவுநீரால் நிலத்தடி நீா் மாசடைந்ததால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனா். எனவே, தனியாா் எரிச்சாராய ஆலைக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதனால், கடந்த தோ்தலுக்கு முன்பாக உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மூடப்பட்ட அந்த ஆலையில் எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கக் கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த 3 ஊராட்சிகளைைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டு, எத்தனால் ஆலைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், 5,000 அஞ்சல் அட்டைகளில் புகாா் கடிதங்களை எழுதி, சீா்வரிசை தட்டுகளில் வைத்து, மேளதாளங்களுடன் எலவமலை கிளை அஞ்சல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதோடு, தமிழக முதல்வருக்கு அனுப்பிவைத்தனா். எதிா்ப்பை மீறி அனுமதி வழங்கினால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.