வால்வாட்சர் பிலிம், புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், அனகா, யஷ்வந்த் என பலர் நடித்துள்ள இணையத் தொடராக வெளிவந்துள்ளது வதந்தி 2. வதந்தி 1 வெற்றிக்குப் பிறகு வெளிவந்துள்ள இந்த இணையத்தொடர் பிரைம் ஓடிடி தளத்தில் 8 எபிசோட்களாக வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.எட்டுவழி சாலைக்காக நடக்கும் மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் பூமி பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் இருந்து எலும்புக்கூடு கிடைக்கிறது. சுமார் இரண்டரை ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு யாருடையது? என்ன நடந்தது? என விசாரிக்கும் விசாரணையின் பொறுப்பு காவல் அதிகாரியான மூசா ராசாவான சசிகுமார் கைக்கு வருகிறது. எலும்புக்கூட்டை அடிப்படையாகக் கொண்டு விசாரிக்க ஆரம்பித்த சசிகுமார், விசாரணையின் முடிவில் கொலை வழக்குடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டு வீரரான மணி தண்டனை பெற காரணமாகிறார். மணிக்கும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுக்கும் என்ன தொடர்பு? எதற்காக மணி சிறைக்கு சென்றார்? பின்னணியில் என்ன நடந்தது? என விரிகிறது வதந்தி 2 இணையத் தொடர். முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவல் அதிகாரியாக வரும் சசிகுமார் யதார்த்தமான, அவருக்கே உண்டான நடிப்பைக் கொடுத்திருப்பது படத்திற்கு சரியாக உதவியிருக்கிறது. மனைவியிடம் காதலை வெளிப்படுத்தும் இடங்களிலும், வழக்கு விசாரணைக்காக அதை ஈடுகட்ட தவிக்கும் தருணங்களிலும், வழக்கை சரியான திசையில் கொண்டு சென்று உண்மையான குற்றவாளியைக் கண்டறிவதற்காக பிரயத்தனப்படும் இடங்களிலும் அபாரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். முதல்முறையாக காவல் அதிகாரியாக நடித்துள்ள சசிக்குமார் தனது கதாபாத்திரத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இவருக்கு இணையாக கவனம் பெறுகிறது ஜல்லிக்கட்டு வீரர் மணியாக நடித்துள்ள யஷ்வந்தின் நடிப்பு. மதுரை சுற்றுவட்டார இளைஞனாக வரும் யஷ்வந்த அந்த மண்ணுக்குண்டான தோரணையுடன் பேசும் வசனங்கள் இயல்பாக அமைந்திருக்கின்றன. தனது காதலிக்காக அவரது குடும்பத்தினரிடம் கோபப்படுவது தொடங்கி, தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என சிறைக்குள் இயலாமையில் தவிக்கும் இடங்கள் வரை அவரது நடிப்பு காட்சிக்கு காட்சி பலம் சேர்ந்திருக்கிறது. காதல், கோபம், தவிப்பு, ஆற்றாமை என அத்தனையும் அவர் திரையில் கடத்தியிருப்பது திரையுலகில் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சசிகுமார் உடன் வரும் நக்கலான வசனங்களைப் பேசும் விவேக் பிரசன்னா, உயரதிகாரியானாலும் வழக்கின் மீது ஆர்வம் காட்டும் அனகா ஆகியோருடன் ரேவதியின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. க்ரைம் த்ரில்லருக்கு தேவையான மர்மமும், அதிர்ச்சியும், ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் இயக்குநர் போடும் முடிச்சும், அது அவிழ அவிழ அடுத்தடுத்து சஸ்பென்ஸ் ஏற்படுத்துவதும் பார்வையாளர்களைக் காட்சியுடன் கட்டிப்போடுகின்றன. இறுதி இரண்டு எபிசோட்களும் உணர்வுரீதியான காட்சிகளுக்கு தீனிபோடும் அதே நேரத்தில் குற்றவாளியை நெருங்கிவிட்ட பதற்றத்தை நமக்கும் ஏற்படுத்துகிறது. காட்சிக்கு ஏற்ற பின்னணி இசையும், சலிப்பை ஏற்படுத்தாத ஒளிப்பதிவும் தொழில்நுட்ப ரீதியாக வதந்தி 2-க்கு பெரிய பக்கபலம். அபர்ணா தாஸ் உடனான குடும்பக் காட்சிகள் கதைக்கு பெரிய துணை இல்லை என்பதால் அவ்விடங்களை சற்று குறைத்திருக்கலாம். தலைமை காவலரின் வீடியோ காட்சிகள் என சின்ன சின்ன லாஜிக் குறைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். எனினும் சற்றும் தொய்வை கொடுக்காத திரைக்கதை, சரியான கதாபாத்திரத் தேர்வு, மர்மங்களை ஏற்படுத்தி வென்ற எழுத்து என பல காரணங்களால், தவிர்க்காமல் பார்ப்பதற்கான சரியான தேர்வாக வென்றிருக்கிறது வதந்தி 2 இணையத் தொடர்.Did Vadhandhi 2 Succeed in Creating Mystery? A Film Reviewதுப்பாக்கி முனையில் ஒரு ரோஜா... லோகேஷ் கனகராஜின் டிசி - திரை விமர்சனம்!