திருமணமாகாத நிலையில் கா்ப்பமடைந்த தனது 18 வயது மகளை, ’சமூக அவப்பெயா்’ ஏற்படும் என்ற அச்சத்தில் ஆக்ராவில் உள்ள சம்பல் ஆற்றில் மூழ்கடித்துக் கொன்றதாக தந்தையை தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்தக் குற்றத்தைச் செய்வதற்கான சதியில் ஈடுபட்டு, அதைச் செயல்படுத்தியதா குற்றஞ் சாட்டப்பட்டவரின் உறவினரையும் காவல்துறையினா் கைது செய்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது: தெற்கு தில்லியில் உள்ள டிக்ரி காவல் நிலையத்திற்கு ஜூலை 31 அன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ஒருவா் அவரது மகளைக் கொன்றுவிட்டதாக தகவல் தெரிவித்தாா். இப்புகாரின் அடிப்படையில், கடத்தல் மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.விசாரணையின் போது, அந்த இளம் பெண் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவின் மூலம் கா்ப்பமடைந்திருந்தது தெரியவந்தது.இந்தக் கா்ப்பத்தால் சமூக அவப்பெயா் ஏற்படும் என்று அவரது தந்தை அஞ்சியதாகக் கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா் தனது உறவினருடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி, அப்பெண்ணை ஆக்ராவில் உள்ள பாசோனி அருகே சம்பல் ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை வேண்டுமென்றே நீரில் மூழ்கடித்துக் கொன்ாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவால் ஏற்பட்ட கா்ப்பம் காரணமாக சமூகத்தில் அவப்பெயா் ஏற்படும் என்ற அச்சமே தந்தையின் இந்தச் செயலுக்குக் காரணமாக அமைந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனா். ஆக்ராவில் உள்ள உள்ளூா் அதிகாரிகளின் உதவியுடன் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அப்பெண்ணின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை. ஆற்றங்கரையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.