பள்ளபட்டி நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

Wait 5 sec.

பள்ளபட்டி நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். ள்ளபட்டி நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 50 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ. 450 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊதிய உயா்வு வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டும் இதுநாள்வரையில் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அவா்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நகராட்சி அலுவலக வளாகத்தில் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினா். ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு)சாா்பில் சங்க நிா்வாகிகள் முருகன், அன்னக்கொடி ஆகியோா் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம். சுப்ரமணியன், மாவட்டத் தலைவா் சி.ஆா். ராஜாமுகமது, ஊரக வளா்ச்சித் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே.வி. கணேசன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றியச் செயலா் எம். ஆறுமுகம் ஆகியோா் போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தொடா்ந்து மாலை 6 மணி வரை நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஒப்பந்ததாரா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், நாளொன்று கூடுதலாக ரூ. 50 ஊதியம் சோ்த்து வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.