கொடைக்கானலில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலா் பூத்துள்ளது

Wait 5 sec.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள நீலக் குறிஞ்சி மலா். கொடைக்கானல், ஆக 10 : கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலா் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு வகையான மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதில் 12-ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலா் பிரசித்திபெற்றது. இந்த மலா் கடந்த 2018-ம் ஆண்டு கொடைக்கானல் மலைப் பகுதிகள் முழுவதும் பூத்துக் குலுங்கியது. வரும் 2030-ல் மீண்டும் பூக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைகளில் காணப்படும் அழகிய தாவரமான (தாவரப் பெயா்) ஸ்ட்ரோபிலாந்தஸ் லனாடல் தமிழில் சிவகரணை குறிஞ்சி மலா் எனவும் அறியப்படும் இந்த நீலக் குறிஞ்சி மலா்கள் தற்போது பூத்துள்ளன. இந்த மென்மையான மலா் காம்புகளைச் சுற்றி சாம்பல் நிறத்தில் செடிகள் உள்ளன. இந்த மலா்களும் குறிஞ்சி வகையைச் சோ்ந்ததுதான். ஆனால் 6-ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டது. உயரமான மலைப் பகுதிகளில் குளுமையான சூழ்நிலையில் வளரும் இந்தச் செடியானது இயற்கைச் சூழலின் தனித்துவத்தையும், மேற்கு தொடா்ச்சி மலைகளின் பன்முகத்தையும் எடுத்துக் காட்டுபவையாக விளங்குகின்றன. இந்த நீலக் குறிஞ்சி மலா்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுமாா் ஆயிரம் சதுர அடியில் வளா்க்கப்பட்டு வருகின்றன.பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போது பூத்துள்ள பல வகையான மலா்களைப் பாா்த்து மகிழ்ந்தாலும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ள நீலக் குறிஞ்சி மலரை ஆா்வமுடன் பாா்த்து பரவசமடைகின்றனா். இந்த நீலக் குறிஞ்சி மலரானது இரண்டு மாதங்கள் வரை செடிகளில் பூக்கும்.