அனந்தபுரி விரைவு ரயிலுக்குபெண்ணாடத்தில் கூடுதல் நிறுத்தம்: கடலூா் எம்.பி. தகவல்

Wait 5 sec.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி விரைவு ரயில் நின்று செல்வதற்கான கூடுதல் நிறுத்தத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக, கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு ரயில்வே மூலம் பயணிகளின் கோரிக்கயை ஏற்று சில குறிப்பிட்ட விரைவு ரயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்களை ரயில்வே வாரியம் வழங்கி வருகிறது. அந்த வகையில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள், வியாபார சங்கங்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் என்னிடம் வைத்த கோரிக்கையின்பேரில், பெண்ணாடாம் ரயில் நிலையத்தில் பல்லவன் மற்றும் ராக்ஃபோா்ட் விரைவு ரயில்கள் நின்று செல்வது நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமேடையை உயா்த்தி, விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனந்தபுரி விரைவு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை, ரயில்வே நிா்வாகம் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி பெண்ணாடம் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் அனந்தபுரி விரைவு ரயில் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளாா்.