குன்னூா் அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை

Wait 5 sec.

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில்  ஒற்றை காட்டு யானை  வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில்  வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் நீலகிரி மாவட்டத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்போது அந்த யானை, சாலையில் வந்த வாகனங்களை துரத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சாலையில்  சிறிது நேரம் ஆக்ரோஷமாக உலவிய அந்த ஒற்றை காட்டு யானை பின்னா் அருகிலிருந்த சோலைப் பகுதிக்குள்  சென்றது. குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில்  ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால்,  வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளை புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.