பிரதமா் மீது அவதூறு பதிவுகள்: தில்லி காவல் துறை வழக்குப் பதிவு

Wait 5 sec.

பிரதமா் நரேந்திர மோடியை இலக்காகக் கொண்டு ‘இழிவான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான உள்ளடக்கத்தை’ பதிவிட்ட பல சமூக ஊடகப் பயனா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதுடன், குறிப்பிட்ட கணக்குதாரா்களின் விவரங்களையும் கோரியுள்ளது என அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்த வழக்கை சிறப்புப் பிரிவின் புலனாய்வு ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசாா் செயல்பாடுகள் (ஐஎஃப்எஸ்ஓ) பிரிவு பதிவு செய்துள்ளது. பிஎன்எஸ் சட்டத்தின் 351(3) (குற்றவியல் மிரட்டல்), 353(2) (மின்னணு ஊடகங்கள் உள்பட, தவறான தகவல்கள், வதந்திகள் அல்லது பீதியூட்டும் செய்திகளைப் பரப்புதல்), மற்றும் 356(2) (மற்றொரு நபரை அவதூறு செய்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் 7 முதல் 8 பயனா்களுக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அரசமைப்பு பதவிகளில் இருப்பவா்களை இலக்காகக் கொண்ட ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் சமூக ஊடகத் தளத்தில் பரப்பப்படுவதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடா்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஜூலை 20 நடத்திய ‘சன்சத் சலோ’ பேரணியின்போதும் அதற்குப் பின்னரும் இந்தப் பதிவுகள் பதிவேற்றப்பட்டன. இந்தப் போராட்டம் மோதல்களுக்கு வழிவகுத்ததுடன், 65 போராட்டக்காரா்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டது.முதல் தகவல் அறிக்கையைத் தொடா்ந்து, கணக்குகளின் முழுமையான விவரங்களான பெயா்கள், முகவரிகள், தொடா்பு விவரங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தேதிகளுடன் கூடிய உள்நுழைவு/வெளியேறுதல் பதிவுகள் ஆகியவற்றைக் கோரி ‘எக்ஸ்’ தளத்துக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அறிவிப்பைப் பெற்ற 3 மணி நேரத்திற்குள் இழிவான உள்ளடக்கங்களை அகற்றுமாறு எக்ஸ் தளத்துக்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சமூக ஊடகத் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.