போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்த உத்தரவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஜூலை 30) பேசினார். மாநிலங்களவையில் பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல் செய்தபோது மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:''தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்தது யார்? கண்ணீர் புகைக்குண்டுகள், பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்? யாருடைய கட்டளைக்கிணங்க பாதுகாப்புப் படை வீரர்கள், ஆயுதப் படையினர் செயல்படுகின்றனர். இந்த நிகழ்வுகளுக்கு பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதுயார்? இந்த நாடு இக்கேள்விக்கான பதில்களை கேட்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் இதற்கு பதில் அளிக்கவில்லை என்றால், பதவி விலக வேண்டும்.அமித் ஷா பதவி விலகவில்லை என்றால், பிரதமர் நரேந்திர மோடி அவரை அமைச்சரவையில் இருந்தே நீக்க வேண்டும். அமைச்சர் அமித் ஷாவை பாதுகாக்கத் துடிக்கிறது அரசு. ஆனால், நீண்ட நாள்களுக்கு அவரைப் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. தில்லி போராட்டத்தில் 100க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கண்கள் உள்பட பல இடங்களில் காயங்களுடன் மோசமான நிலையில் பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தால் பார்வை இழந்த மாணவர்கள் உண்டு. உறுப்புகள் சேதமடைந்த மாணவர்கள் உள்ளனர். அமைச்சர் அமித் ஷாவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திருத்தப்பட்ட மசோதாவில் திருத்தப்பட்ட எண்கள் மட்டுமே உள்ளன. அதிக அபராதம், கடும் தண்டனை, சிறப்பு பணிக்குழு போன்றவற்றில் எந்தவித மாறுபாடும் இல்லை. இந்த மசோதா எந்த வகையிலும் வேறுபாடு காட்டப்போவதில்லை. இன்று அரசு செய்வதை, நாங்கள் 2024-ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்திருந்தோம், ஆனால் அப்போது அரசு எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. அப்போது, மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது; அரசு அரசியல் செய்ய விரும்பியது, அதே சமயம் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின் போது காகிதக் கசிவுகள் குறித்துக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். அதாவது, அரசு அந்தச் சட்டத்தை அவ்வளவு அவசரமாகக் கொண்டுவந்ததால், இரண்டு ஆண்டுகளுக்குள் அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது'' எனக் குறிப்பிட்டார். மக்களவையிலும் நிறைவேறியது வந்தே மாதரம் சட்ட மசோதா!Amit Shah responsible for the lathi-charge, must resign: Kharge speaks in Rajya Sabha