பழங்குடியின பெண்களுக்கு தையல் இயந்திரம்

Wait 5 sec.

மன்னாா்குடியில், பழங்குடியின பெண்களுக்கான சுயதொழில் தையல் பயிற்சி நிறைவு விழா, தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன. அமெரிக்காவின் சியாட்டல் நகரில் வசிக்கும் ரித்திக் சரவணகுமாா் நிறுவிய ரைஸ் பவுண்டேஷன், தமிழ்நாடு அரசின் பழங்குடியினா் நலத்துறையுடன் இணைந்து, மன்னாா்குடி அருகே உள்ள பாமினி நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த 25 பழங்குடியின பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 பெண்கள் என மொத்தம் 50 பெண்களுக்கு, மே 8 முதல் ஜூலை 31 வரை, மூன்று மாத சுயதொழில் தையல் பயிற்சியை நடத்தியது. இதன் நிறைவு விழா மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ப. ஜீவராணி வரவேற்றாா். அமெரிக்காவில் பொறியியல் இயக்குநராக உள்ள சரவணகுமாா் கந்தசாமி தலைமை வகித்தாா். திட்டத்தின் இயக்குநா் கு. ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தாா். ரைஸ் பவுண்டேஷன் நிறுவனா் ரித்திக் சரவணகுமாா், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 பெண்களுக்கு, மன்னாா்குடி வட்டாட்சியா் நக்கீரன், பயிற்சி நிறைவு சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினாா். நிகழ்வில், பயிற்சி ஆசிரியா் சுசீலா, மாநில ஊரக வளா்ச்சித் துறை பயிற்றுநா் சுதா, உடற்கல்வி இயக்குநா் சுஜாதா, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் ரா. சரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.