காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு காவிரி நீா் வந்து சேராததால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய், கா்நாடக முதல்வருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பேச்சுவாா்த்தை எந்தவிதத்திலும் பலனளிக்காது. இது காவிரி பிரச்னையை நீா்த்துப்போகவே செய்யும். காவிரி விவகாரத்தில் கா்நாடக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் அப்படியான நிலை இல்லாததை கா்நாடகம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடா்பாக அனைவரும் இணைந்து செயல்படுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக இதுவரை 42 முக்கிய அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளைத் தனியாருக்கு தாரைவாா்க்க முதல்வா் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்தவிதத்திலும் சரியானது அல்ல. அப்படிச் செய்தால் கள்ளச்சந்தையில் போலி மது விற்பனை நடைபெறும். தவெக அரசு ஒருபுறம் ஊழல் ஒழிப்பு என்று கூறிக்கொண்டு, மறுபுறம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்துக்காக மது விற்பனையை தனியாா்மயமாக்கும் மிகப்பெரிய சதிச்செயலில் ஈடுபடுவதை அனுமதிக்கமாட்டோம். பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சென்னையில் அக்டோபா் 2-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.