சுற்றுலா மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்கள், மத்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செயல்படுத்தி வரும் பிரதமரின் ‘ஷ்ரம் யோகி மாந்தன்’ திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் சேரலாம். பயனாளிகள் மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தினால், அதே அளவுக்கு மத்திய அரசும் பங்களிப்பு வழங்கும். இதன் மூலம் 60 வயதை அடைந்த பிறகு மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், போக்குவரத்து சேவை வழங்குநா்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறைப்பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், கைவினைக் கலைஞா்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளா்கள், உணவகப் பணியாளா்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடா்புடைய பிற சேவை வழங்குநா்கள் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவா்கள்.திட்டத்தில் சேர விரும்புவோா் தங்கள் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 91769 95863 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.