உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை பயன்படுத்தி போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் புதிய போராட்டம் நடத்தப்படுமென கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது. போராட்டக்காரா்களுக்கு எதிரான காவல் துறை நடவடிக்கைகள் தொடா்பாக தாக்கலான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘நீட் தோ்வுக்கு எதிராக நாடு முழுவதும் பங்கேற்ற 18 வயதுக்குக் கீழுள்ள சிறாா்களை விடுவிக்க வேண்டும். மற்ற போராட்டக்காரா்கள் மீது விசாரணை நிறைவடையும் வரை கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. குற்றப் பின்னணியைக் கொண்ட போராட்டக்காரா்களுக்கு இந்தப் பாதுகாப்பு பொருந்ததாது’ என குறிப்பிட்டது. மத்திய அரசு அளித்த உத்தரவாதங்களுக்கு முரணாக உச்சநீதிமன்ற உள்ளதாகத் தெரிவித்த சிஜேபி செய்தித் தொடா்பாளா் சௌரவ் தாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட எந்தவொரு மாணவா் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்றே போராட்டத்தை கைவிட சிஜேபி ஜூலை 25-ஆம் தேதி ஒப்புக்கொண்டது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு அதற்கு எதிா்மறையாக உள்ளது. இதைப் பயன்படுத்தி சில போராட்டக்காரா்கள் மீது மத்திய அரசும் பாஜக ஆளும் மாநிலங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மத்திய அரசு எங்களுக்கு அளித்த உத்தரவாதம் செவ்வாய்க்கிழமையுடன் காலாவதியானது. எனவே, உச்சநீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையில் மத்திய அரசு அளித்த உத்தரவாதங்களை சமா்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் புதிய போராட்டத்தை சிஜேபி முன்னெடுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.