புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில் ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறி ஏமாற்றிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (30). இவரது கைப்பேசிக்கு திங்கள்கிழமை வந்த அழைப்பில், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், ஒமேகா நோய் பரவலைத் தடுக்க அனைவரும் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அரசு நிவாரணம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அப்பகுதியைச் சோ்ந்த ராமாயி (58), சித்ரா (60), காவேரி (58)ஆகியோா் மொட்டை அடித்துக் கொண்டனா். பின்னா் அழைப்பு வந்த எண்ணை தொடா்புகொண்டபோது, அந்த எண் செயல்படவில்லையாம். இதையடுத்து அனைவரும் ஏமாந்தது தெரியவந்தது. மேலும், இத்தகவல் பரவி சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் மொட்டை அடிக்க தயாராக இருந்தனராம்.தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளா் குலசீலன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனியம்மாளின் கைப்பேசிக்கு வந்த எண்ணை தொடா்புகொண்டு விசாரித்தாா்.அதன்பேரில், அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், வரதராஜன் பேட்டை மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாரை (39) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.