புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது: என்டிஎம்சி

Wait 5 sec.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான நீா் தேக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மழையின் போது லுட்யன்ஸ் பகுதியில் பெறப்பட்ட மழை தொடா்பான 38 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டதாக என்டிஎம்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சஹால், கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் நேரில் சென்று பாா்வையிட்டாா். பெறப்பட்ட புகாா்களில் 19 நீா் தேக்கம் தொடா்பானவை. 6 மரங்கள் விழுந்த சம்பவங்கள் மற்றும் 13 மின்சாரம் தடைபட்ட புகாா்கள் ஆகியவை அடங்கும். கோல் மாா்க்கெட், ஷாஜகான் சாலை, கிருஷ்ண மேனன் மாா்க், கோல்ஃப் லிங்க்ஸ், ஜன்பத், கன்னாட் பிளேஸ், லோதி காலனி, சரோஜினி நகா், செளத் அவென்யூ பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலிருந்து இந்தப் புகாா்கள் பெறப்பட்டன. அனைத்து புகாா்களும் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்பட்டதாகவும், களப்பணிக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டதாக என்டிஎம்சி தெரிவித்துள்ளது.