ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு நகராட்சி, மாநாகராட்சி அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணியிடம் மற்றும் பதவி உயா்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். அரசாணை எண் 152 மற்றும் அரசாணை எண் 10-ன் படி அலுவலக உதவியாளா், வருவாய் உதவியாளா், கன்சா்வண்சி இன்ஸ்பெக்டா், ஓட்டுநா், குடிநீா் பிரிவு அடிப்படை பணியிடங்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள், புள்ளி விவரக் குறிப்பாளா்கள் பணியிடங்கள் மீண்டும் வழங்கிட வேண்டும். அரக விடுமுறை நாள்கள் மற்றும் அலுவலக நேரம் கடந்து ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியா்களுக்கு பதவி உயா்வு இல்லாத நிலை உள்ளது. பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு பதவி உயா்வு கிடைப்பதை உறுதிப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆா்ப்பாட்டத்துக்கு, நகராட்சி குடிநீா் பணியாளா் சங்க மாநில பொருளாளா் விஜயராகவன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்க மாநிலச் செயலா் எஸ்தா் சோபா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாவட்ட துணைத் தலைவவா் பாண்டியன், துணைச் செயலா் லட்சுமி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வேல்முருகன், ஜெயங்கொண்டம் அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் ராகவன், வட்டச் செயலா் ஷா்மிளா உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.