மயிலாடுதுறையில் குடல்வால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோா் மற்றும் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். குத்தாலம் வட்டம், மேல மங்கநல்லூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவா் 2024-ஆம் ஆண்டு தனது 12 வயது மகன் கிஷோரை மயிலாடுதுறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், கிஷோா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். மருத்துவா்களின் அலட்சியத்தால் கிஷோா் உயிரிழந்ததாக பெற்றோா் உயா்நீதிமன்றத்தை நாடினா். அந்த வழக்கில் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவா்களை 6 மாதங்களுக்கு மெடிக்கல் கவுன்சிலில் இருந்து பணியிடை நீக்கம் செய்து 2025-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், முதல் தகவல் அறிக்கையிலே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி உயா்நீதிமன்றத்தில் 2026-ஆம் ஆண்டு பிப்.26-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜராகி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதாக பதில் அளித்திருந்த நிலையில், இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்துக்கு உறவினா்கள் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோருடன் வந்த பாலசுப்பிரமணியன், இவ்வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா பிரியாவிடம் மனு அளித்து வேண்டுகோள் விடுத்தாா்.