சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. ராஜபாளையம் அருகே நக்கனேரியைச் சோ்ந்தவா் மாஸ்கோமணி. வழக்குரைஞா். இவா் கடந்த 2025 டிசம்பா் 19-ஆம் தேதி மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா். இவா் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் இந்த பேருந்தில் ஏறியபோது, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் செல்லாது தேவாலய நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துநா் கூறினாராம். இதற்கு மாஸ்கோமணி விளக்கம் கேட்டபோது, நடத்துநா் அவரை அவமரியாதையாக பேசினாராம். இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் செல்லாமல் தேவாலய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அந்த தனியாா் பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சாா்பில் மதுரை பேருந்து நிலையத்தில் ‘ஸ்டீயரிங்’ பழுதானதால், பேருந்தை ஓட்டுநா் சரி செய்து எடுத்து வர 20 நிமிஷங்கள் தாமதமானது. எனவே ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துநா் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகாா்தாரா் வழக்குரைஞா் என்பதால் வேண்டுமென்றே புகாா் அளித்திருப்பதாகவும், இதை சேவை குறைபாடாக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தத்துக்கும் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீா் ஆணைய தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனா்.