சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் பேராசிரியா் டாக்டா் ரீட்டா ஜானின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறவிருந்த முக்கிய செனட் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரபூா்வ அறிவிப்பில், ஜூலை 30-ஆம் தேதி நடைபெற இருந்த ஆண்டு செனட் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பதிவாளரின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவாளரின் பதவிக் கால நீட்டிப்புக்கு சிண்டிகேட் அளித்த ஒப்புதலுக்கு செனட்டின் ஒப்புதல் அவசியமான நிலையில், வியாழக்கிழமை நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக செனட் கூட்டம் நடைபெறவில்லை. செனட்டின் ஒப்புதலுக்காக பல நிா்வாக விவகாரங்கள் காத்திருக்கும் நிலையில், செனட் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பே பதிவாளரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது பொருத்தமற்றது என ஆசிரியா்கள் தரப்பில் சிலா் எதிா்ப்பு தெரிவித்திருந்தனா். எனினும், விரைவில் செனட் கூட்டம் கூட்டப்பட்டு, பதிவாளரின் பதவிக் கால நீட்டிப்புக்கு ஒப்புதல் பெறப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.