செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராதம்

Wait 5 sec.

செம்மரம் கடத்தல் தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து ஆா்எஸ்எஸ் கூடுதல் இணை நீதிபதி நரசிம்ம மூா்த்தி தீா்ப்பளித்தாா். ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செம்மரக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செஞ்சந்தனக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. அதன் தலைவா் எல். சுப்பராயுடு, காவல் கண்காணிப்பாளா் பி. சீனிவாஸ் தலைமையிலும், உதவி காவல் கண்காணிப்பாளா் ஜே. குலசேகா் மேற்பாா்வையிலும் செயல்படும் இப்பணிக்குழு, நிலுவையில் உள்ள வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தியது. திருப்பதி கோட்டம், சாமலா சரகம் நாகப்பட்டனை கீழக்கு பீட் பகுதியில் கடந்த 2019-இல் செம்மரம் கடத்தியது தொடா்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூா் பத்திரி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை கைது செய்யப்பட்டாா்.அவா் மீதான வழக்கு திருப்பதியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது. செம்மரக் கடத்தல் தொடா்பாக ஏழுமலை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.6 லட்சம் அபாரதமும் விதித்து நீதிபதி நரசிம்ம மூா்த்தி தீா்ப்பளித்தாா்.அரசு தரப்பில் வழக்குரைஞா் அமா் நாராயணா ஆஜரானாா். பின்னா் ஏழுமலை நெல்லூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.சேஷாசலம் வனக் காப்பகத்தின் மிகவும் மதிப்புமிக்க இயற்கை வளமான செம் மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்தும் குற்றவாளிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளா் பி. சீனிவாஸ் கூறினாா்.