மொராக்கோவில் இருந்து 60,000-க்கும் அதிகமான அகதிகள் ஸ்பெயின் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் கடுமையான பஞ்சம் மற்றும் உள்நாட்டு மோதல்களால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறி வருகின்றனர். இந்தக் குடியேற்றம் பெரும்பாலும் கடல் வழியாகச் சட்டவிரோதமாக ஆபத்தான முறையில் நடைபெறுவதால், வழியில் பலர் பலியாகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வடக்கு ஆப்பிரிக்காவில் மொராக்கோ நாட்டின் அருகில் அமைந்துள்ள சியூட்டா மற்றும் மெல்லிலா ஆகிய ஸ்பெயினின் நகரங்களுக்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க அகதிகள் கூட்டம் கூட்டமாகக் குடியேறி வருகின்றனர்.சமீபத்தில், சியூட்டா மற்றும் மெலில்லாவுக்குள் கடல்வழியாக நுழைய முயன்று தடுத்து நிறுத்தப்பட்ட மொராக்கோ அகதிகளை திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மொராக்கோ மற்றும் சஹாரா பாலைவனப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பெயினுக்குப் படையெடுத்துள்ளனர். இதுவரை 60,000-க்கும் அதிகமான அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.இதனால், ஸ்பெயினில் கடும் மனிதாபிமான நெருக்கடி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஏராளமான அகதிகள் கடல் மற்றும் நிலம் எல்லை வழியாக சியூட்டாவுக்குச் சென்றடைந்துள்ளனர். இவர்களில், பலரும் இடையில் அமைந்துள்ள 5 கி.மீ. நீளமான கடலில் நீச்சல் அடித்து வருவது தெரியவந்துள்ளது. இத்துடன், ஸ்பெயினுக்குள் நுழையும் முயற்சியில் கடல் மற்றும் நிலம் வழியாகப் பயணம் மேற்கொண்ட சுமார் 34 பேர் கூட்டநெரிசல்களில் சிக்கியும், கடலில் மூழ்கியும் பலியானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, 25,000 அகதிகள் மொராக்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 31) தெரிவித்துள்ளது. மேலும், நிலைமை ஆய்வு செய்வதற்காக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் சியூட்டாவுக்கு இன்று வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அலையலையாக வந்துக்கொண்டிருக்கும் மொராக்கோ அகதிகளைக் கட்டுப்படுத்த சியூட்டா மற்றும் மெலில்லாவில் ஸ்பெயினின் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பலி! more than 60,000 refugees have entered Spain illegally from Morocco.